இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி


இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
x
தினத்தந்தி 1 May 2024 6:08 AM GMT (Updated: 1 May 2024 7:19 AM GMT)

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரோடு,

கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்றிரவு கரூரிலிருந்து ஜடையம்பாளையத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது நெசவாளர் காலனி என்ற இடத்தில் பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கல்லூரி மாணவர்கள் சிலர் பயணித்த காரும் முருகனின் காரும் நேருக்குநேர் மோதியது.

இந்த விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி ரஞ்சிதா, இவர்களது மகன் அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த தம்பதியின் மற்றொரு மகள் நித்திஷா படுகாயமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நித்திஷாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நித்திஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்த 4 நபர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த பவானிசாகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் கல்லூரி மாணவர்களின் காரும் கடும் சேதம் அடைந்தபோதும், அவர்கள் அனைவரும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.


Next Story