அசாம் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஒலித்த எச்சரிக்கை அலாரம் - நடுவானில் அவசர கால பட்டனை அழுத்திய சிறுமியால் பரபரப்பு


அசாம் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஒலித்த எச்சரிக்கை அலாரம் - நடுவானில் அவசர கால பட்டனை அழுத்திய சிறுமியால் பரபரப்பு
x

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து 147 பயணிகளுடன் விமானம் வந்து கொண்டு இருந்தது. இதில் கவுகாத்தியை சேர்ந்த ஹேம்நாத் (வயது 61) என்பவர் தனது 8 வயது பேத்தி மற்றும் குடும்பத்தினர் 4 பேருடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானி கேபினில் திடீரென, அவசரகால எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதனால் விமான பயணிகள் மத்தியில் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து, விமான பணிப்பெண்களும், ஊழியர்களும் பதற்றத்துடன் விமானத்திற்குள் அங்கும், இங்கும் ஓடி பயணிகளை கண்காணித்தனர்.

அப்போது ஹேம்நாத்தின் பேத்தி அமர்ந்திருந்த இருக்கைக்கு கீழ் உள்ள அவசரகால உபயோகத்திற்காக இருந்த லைப் ஜாக்கெட்டை எடுத்து அணிந்து கொண்டு இருந்தார். இதை கண்ட விமான பணிப்பெண்கள் அதிர்ச்சி அடைந்து அந்த சிறுமியை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், தான் அமர்ந்திருந்த விமான இருக்கை அருகே இருந்த ஒரு பட்டனை அழுத்தினேன். இருக்கை மேலே தூக்கியபோது அதில் இருந்த லைப் ஜாக்கெட், வெளியே வந்தது. நான் விளையாட்டாக எடுத்து மாட்டிக்கொண்டேன் என்று கூறினார். இதையடுத்து விமானப் பணிப்பெண்கள், லைப் ஜாக்கெட்டை சிறுமியிடம் இருந்து வாங்கி இருக்கைக்கு அடியில் உள்ள பாதுகாப்பு பகுதியில் வைத்து மூடினர். இதை எடுத்து சைரன் ஒலி நின்றது. இதையடுத்து பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

விமானத்தில் ஒவ்வொரு இருக்கைக்கும் கீழே உயிர் காக்கும் லைப் ஜாக்கெட் இருக்கும். அவசர ஆபத்து நேரத்தில் மட்டும் பயணிகள் ஒவ்வொருவரும் அவரவர் சீட்டுகளுக்கு அருகே உள்ள பட்டனை அழுத்தி லைப் ஜாக்கெட்டை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டும். இது தவிர மற்ற நேரங்களில் இந்த பட்டனை யாரும் உபயோகப்படுத்த கூடாது. அதை மீறி யாராவது உபயோகப்படுத்தினால் இதைப்போல் அபாய சைரன் பைலட் கேபின் கேட்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது என விமான ஊழியர்கள் கூறினார். இதைத்தொடர்ந்து, சென்னையில் விமானம் தரையிறங்கியதும் உயர் அதிகாரிகள் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், உள்ளிட்டோர் ஹேம்நாத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அவரை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது, ஹேம்நாத் 8 வயது சிறுமியான தனது பேத்தி விளையாட்டாக பட்டனை அழுத்தி விட்டாள். பட்டனை அழுத்தினால் இது போன்ற பிரச்சினைகள் இருக்கிறது எதுவும் தெரியாது.

எனவே மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். போலீஸ் விசாரணையில், பட்டனை அழுத்தியதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து ஹேம்நாத் குடும்பத்தினரிடம் எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து விடுவித்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story