தலைவர்கள் சிலை வைக்கும் வீண் வேலைகளில் இனி திமுக ஈடுபடாது என்று நம்புகிறோம் - அண்ணாமலை


தலைவர்கள் சிலை வைக்கும் வீண் வேலைகளில் இனி திமுக ஈடுபடாது என்று நம்புகிறோம் - அண்ணாமலை
x

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன் சிலை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சேலம்,

சேலம் மாடர்ன் தியட்டர்ஸ் அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக தங்களுக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை வீட்டு வசதி வாரியத்தின் நிலம் என்று கூறி முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

இந்தநிலையில் இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார். இதில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன் சிலை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், புகழ்பெற்ற சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலை ஆக்கிரமித்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் சிலை வைக்கும் திமுக அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக பாஜக எழுப்பிய கண்டனக் குரலை அடுத்து, சிலை வைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம்.

தலைநகர் சென்னை, இன்னும் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து முழுமையாக மீளவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து முப்பது மாதங்கள் கடந்தும், தமிழகம் முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் பல நிறைவேற்றப்படவில்லை.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல், பிறருக்கு உரிமையான இடத்தில் தங்கள் தலைவர்கள் சிலை வைப்பது போன்ற வீண் வேலைகளில், இனியும் திமுக ஈடுபடாது என்று நம்புகிறோம். மக்கள் நலன் சார்ந்த பணிகளில் மட்டும் ஈடுபட வலியுறுத்துகிறோம், என்று கூறப்பட்டுள்ளது.


Next Story