தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ.வை கால் வைக்க விடமாட்டோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி


தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ.வை கால் வைக்க விடமாட்டோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
x

குடியுரிமை திருத்த மசோதா, சட்டம் ஆனதற்கு முழு முதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததுதான் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க. அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் வலைதள பதிவில் அவர் கூறியுள்ளதாவது,

"ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சி.ஏ.ஏ. நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய இணை-மந்திரி ஒருவர்.

இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான குடியுரிமை திருத்த மசோதா, சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததுதான்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது தி.மு.க. 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே சி.ஏ.ஏ.வை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்.

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை தி.மு.க. அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்கு துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சி.ஏ.ஏ.-வை கால்வைக்க விடமாட்டோம்"

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.


Next Story