மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தராதது என்ன மாதிரியான மாடல்? - அண்ணாமலை கேள்வி


மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தராதது என்ன மாதிரியான மாடல்? - அண்ணாமலை கேள்வி
x

மத்திய அரசின் திட்டங்களுக்கு பெயரை மாற்றுவதில் மட்டும் முனைப்புடன் இருக்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள மலைவாழ் கிராமம் ஒன்றில், சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண் ஒருவரை துணியால் டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள மலைவாழ் கிராமம் ஒன்றில், சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணிப் பெண் ஒருவரை, துணியால் டோலி கட்டி, மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் காணொளி ஒன்றை, சமூக வலைத்தளத்தில் காண நேர்ந்தது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

கடந்த 2000ம் ஆண்டு, அன்றைய பிரதமர் அமரர் வாஜ்பாய் கொண்டு வந்த கிராம சாலைகள் திட்டம் மூலம், பல ஆயிரம் கோடி நிதி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டும், திருப்பூர், வேலூர் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு இன்னும் கூட சாலை வசதிகள் கிடைக்காமல் இருப்பதே, இத்தனை ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்த ஆட்சிகளின் அவல நிலைக்கு சான்று.

மத்திய அரசின் திட்டங்களுக்கு பெயரை மாற்றுவதில் மட்டும் முனைப்புடன் இருக்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த திட்டங்களை ஒரு நாள் விளம்பரத்துக்காக, வெறும் அறிவிப்போடு மட்டும் நிறுத்திக் கொள்கிறாரே தவிர, அவற்றை நிறைவேற்றுவதில்லை.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story