மேகதாது அணை: சித்தராமையா பேச்சுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி


மேகதாது அணை: சித்தராமையா பேச்சுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
x
தினத்தந்தி 12 April 2024 7:33 AM GMT (Updated: 12 April 2024 8:03 AM GMT)

காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியிருக்கிறார். பெங்களூரு தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், "மேகதாதுவில் அணை கட்ட மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்" என்று கூறியிருக்கிறார். சித்தராமையாவின் இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படியும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளின்படியும் காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பல முறை நான் பெற்றுள்ளேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்த பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

காங்கிரஸ் ஆட்சியில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இதற்கு எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற முறையில் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களை காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனாலும் அவர் அமைதியாக இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும், கர்நாடகத்தின் நலன்களுக்காகவும் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்க துணிந்து விட்டார் என்பது தான்.

1970ம் ஆண்டுகளில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரை காப்பாற்றி கொள்வதற்காக தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை கருணாநிதி நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின், இப்போது மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்த துரோகத்திற்கு மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story