அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி


அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
x

பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம்; பெண்மையை வணங்குவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பெண்ணின் பெருமையை இந்தப் பூவுலகிற்குப் பறைசாற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நன்னாளில் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

சர்வாதிகார அரசுக்கு எதிராகத் தமது உரிமைகளை மீட்பதற்கான உழைக்கும் பெண்களின் புரட்சியை நினைவு கூர்வதற்காக உருவானதுதான் சர்வதேச உழைக்கும் மகளிர் நாள். உழைக்கும் பெண்களின் உரிமைகளை உறுதி செய்வதும், அனைத்து பணிகளிலும், அனைத்து நிலைகளிலும் பாலினச் சமத்துவத்தை உறுதி செய்வதும்தான் சர்வதேச மகளிர் நாள் கொண்டாட்டங்களுக்கு அர்த்தமாகும்.

பெண் ஆளுமைகள் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும்கூட சிறந்த முன்மாதிரிகளாகவே விளங்கி இருக்கிறார்கள். அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும். பாரதி கண்ட புதுமைப் பெண்களின் வடிவமாக ஜெயலலிதா திகழ்ந்ததையும், அவர்களைப் போல பல்வேறு பொதுத்தளங்களில் இயங்கும் பெண்களையும் காணுகின்றபோது மனம் பேர் உவகை கொள்கிறது.

பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம்; பெண்மையை வணங்குவோம்; பெண்மையால் பெருமை கொள்வோம். மகளிர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story