வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு ஜெயில் - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு ஜெயில் - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

சென்னையில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து கணவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சென்னை

சென்னை பல்லவன் சாலை எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 31). கூலித்தொழிலாளி. இவருக்கும் சுதா என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுப்பதாக உறுதி அளித்த 5 பவுன் செயின், பிரிட்ஜ், வாசிங் மெஷின் ஆகியவற்றை கேட்டு சுதாவை, ராஜா மற்றும் அவரது சகோதரி ஆனந்தி (46) ஆகியோர் கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இதனால் மனமுடைந்த சுதா, கடந்த 16.5.2016 அன்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, அவரது சகோதரி ஆனந்தி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்து வந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பி.ஆரத்தி ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆனந்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story