தபால் வாக்கு பதிவு: அனுமதிக்கப் பட்டவர்களின் பட்டியலை வழங்க தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப் பட்டவர்களின் பட்டியலை அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த வசதி ஏற்படுத்தி தரப்படும் என தலைமை தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்கா அண்மையில் அறிவித்தார். விருப்பப்படும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.
இந்த புதிய திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், தபால் வாக்கை வாக்குச்சாவடி அதிகாரி நேரில் சென்று பெற வேண்டும் என்பதால் இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டது. இந்த மனு மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப் பட்டவர்களின் பட்டியலை அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மார்ச் 29ஆம் தேதி மாலை 6 மணிக்குள் இந்த பட்டியலை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. திமுக சார்பாக தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story