சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 224 பேருக்கு தொற்று உறுதி


சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 224 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 25 Feb 2022 4:09 PM GMT (Updated: 25 Feb 2022 4:09 PM GMT)

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீஜிங்,

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த சில மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. 

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 186 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 224 ஆக உயர்ந்துள்ளது. இதில் 142 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், 82 பேர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 109 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,08,604 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக உள்ளது. 

Next Story