இலங்கை போன்ற நிலைமை பாகிஸ்தானில் ஏற்படும்; இம்ரான் கான் கணிப்பு


இலங்கை போன்ற நிலைமை பாகிஸ்தானில் ஏற்படும்; இம்ரான் கான் கணிப்பு
x

பாகிஸ்தானில் பணவீக்கத்தின் புதிய அலை தோன்றியதும், மக்கள் தெருக்களில் இறங்கி போராடும் நிலை ஏற்படும் என்றும் இம்ரான் கான் கூறியுள்ளார்.

கராச்சி,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் (பி.டி.ஐ.) தலைவரான இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியலா ஜெயிலில் நிருபர்களிடம் உரையாடினார். அப்போது அவர், என்னுடைய அனைத்து கணிப்புகளும் உண்மையென நிரூபிக்கப்பட்டு உள்ளன.

பாகிஸ்தானில் அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களிடம் ஒப்பந்தம் போடுவதற்காக, அவர்களிடம் பேச்சுவார்த்தை எதிலும் நாங்கள் ஈடுபடவில்லை என கூறினார். ஒவ்வொரு விசயமும் பொய்களை அடிப்படையாக கொண்டவை. பொய்யான தேர்தலை போல... பாதுகாப்பு அச்சுறுத்தலும் கூட ஒரு பொய்யே என்று கூறினார்.

2024 பொது தேர்தலில், பி.டி.ஐ. கட்சியானது திட்டமிட்டே வெளியேற்றப்பட்டது. ஆனால் வாக்காளர்கள், வாக்கு பதிவு நாளில் இதற்கு பழி தீர்த்தனர். எனினும், ஓட்டு வழியே ஏற்பட்ட மாற்றம் ஏற்று கொள்ளப்படவில்லை. தேர்தல் முடிவை மாற்றி, மோசடியில் ஈடுபட்டு தேசத்தின் நம்பிக்கை உடைத்து நொறுக்கப்பட்ட சூழலில், இலங்கையில் நடந்தது போன்று பாகிஸ்தானிலும் நடக்கும் என்று தன்னுடைய கணிப்பை அவர் வெளியிட்டு உள்ளார்.

சர்வதேச நாணய நிதியகத்திடம் இருந்து இறுதியாக ஒரு கடன் தொகையை பாகிஸ்தான் கேட்டு பெறவுள்ள சூழலில், பணவீக்கத்தின் புதிய அலை தோன்றியதும் நாட்டில், மக்கள் தெருக்களில் இறங்கி போராடும் நிலை ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, தேர்தல் மோசடிக்கு எதிராக, எங்களுடைய கட்சி அமைதியான வழியில் போராடும் என தெரிவித்ததுடன், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம் என்றும் கூறினார். அந்நாட்டில், ஏப்ரல் 2-ந்தேதி செனட் தேர்தல் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தேர்தலிலும் கூட, குதிரை பேரம் நடைபெறும் என்று அவர் தன்னுடைய கணிப்பை வெளியிட்டு உள்ளார்.

இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால், நாட்டு மக்கள் வீதிக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டு பிரதமர் மற்றும் அதிபருக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தன. அதிபர் மாளிகைக்குள் புகுந்து, போராட்டக்காரர்கள் சூறையாடினர். மக்கள் கொந்தளிப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன்பின்னர், பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார். அதன்பின்னர், அவர் இலங்கையின் அதிபரானார்.

இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் இரண்டாண்டுகளாக விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இந்த சூழலில், பொது தேர்தல் நடந்து நீண்ட இழுபறிக்கு பின்னர் அந்நாட்டில் ஆட்சி அமைந்துள்ளது. பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

அவருடைய தலைமையிலான மத்திய மந்திரி சபை 16 உறுப்பினர்களுடன் கடந்த 11-ந்தேதி புதிதாக உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல் கூட்டம் நடந்தது. அப்போது அவர், நாங்கள், சர்வதேச நாணய நிதிய அமைப்பை சார்ந்து இருப்பதில் இருந்து விலகி இருப்போம் என்றும் வெளிநாட்டு கடன்களிலிருந்து பாகிஸ்தானை மீட்க உறுதி எடுத்துள்ளோம் என்றும் கூறினார்.


Next Story