போர் நிறுத்த தீர்மானத்தை தடுத்து நிறுத்திய அமெரிக்கா... ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் முடிவு


போர் நிறுத்த தீர்மானத்தை தடுத்து நிறுத்திய அமெரிக்கா... ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் முடிவு
x

Image Courtesy : AFP

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம்,

பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. போர் காரணமாக காசாவில் இதுவரை 17,700 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமார் 2 மாத காலமாக நடைபெற்று வரும் இந்த போரால், காசாவில் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த பேச்சு வார்த்தையை பல்வேறு நாடுகளும் முன்னெடுத்தன.

இதையடுத்து ஐக்கிய நாடுகள் அவை சாசனத்தின் 99-வது பிரிவை பயன்படுத்தி அவசர கூட்டத்திற்கு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டத்தில் காசாவில் போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது.

ஹமாஸ் அமைப்பிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் ஹமாஸின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என தெரிவித்து இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் மறுப்பு தெரிவித்து நிராகரித்தது. இதனால் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா எடுத்த நிலைப்பாட்டை வரவேற்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாகவும், ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம் என்றும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.


Next Story