ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; ஸ்பெயினில் பொருளாதாரம் பாதிப்பு


ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; ஸ்பெயினில் பொருளாதாரம் பாதிப்பு
x

எரிசக்தி விலையேற்றத்தால் ஸ்பெயினில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்ரிட்,

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியை சார்ந்து இருக்கும் நாடுகள், பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் பணவீக்கம், நிதி பற்றாக்குறை மற்றும் மூலப்பொருட்கள் விநியோக பற்றாக்குறை ஆகியவற்றால், பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

ஸ்பெயினில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், அந்நாட்டின் மின் நுகர்வு உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மின் கட்டணங்கள் அதிகரித்து, மக்களின் நிதிச்சுமை கூடும் என கூறப்படுகிறது.

இதனிடையே எரிசக்தி விலையேற்றத்தால் ஏற்கனவே அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய பொருளாதாரங்கள் எரிசக்தியை அடிப்படையாக கொண்டு இயங்குவதால், விலையேற்றத்தை சமாளிக்க ஸ்பெயின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் இந்த நடவடிக்கைகள் அந்நாட்டின் நிதி பற்றாக்குறையை மேலும் அதிகரிப்பதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்பெயின் நாட்டின் பணவீக்க விகிதம், 1985 ஆம் ஆண்டிற்குப் பிறகு, கடந்த மார்ச் மாதத்தில் 9.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் ஸ்பெயின் மக்களின் அன்றாட செலவு, எரிவாயு மற்றும் மின்சார கட்டணங்கள் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story