7 ஆண்டுகளுக்கு பின் சவுதியுடன் தூதரக உறவை தொடங்கும் ஈரான்


7 ஆண்டுகளுக்கு பின் சவுதியுடன் தூதரக உறவை தொடங்கும் ஈரான்
x

7 ஆண்டுகளுக்கு பின் சவுதி அரேபியாவில் இன்று ஈரான் தூதரகத்தை திறக்க உள்ளது.

தெஹ்ரான்,

வளைகுடா நாடுகளாக சவுதி அரேபியா - ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வந்தது. ஏமன் உள்நாட்டு போரில் சவுதி - ஈரான் இடையேயான மோதல் அதிகரித்தது. அதேவேளை, இரு நாடுகளுக்கு இடையேயான மோதல்போக்கு காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சவுதி அரேபியாவில் செயல்பட்டு வந்த தங்கள் நாட்டு தூதரகத்தை ஈரான் மூடியது.

இதனிடையே, சவுதி அரேபியா - ஈரான் இடையேயான உறவை மேம்படுத்த சீனா முயற்சிகள் மேற்கொண்டது. அந்த முயற்சியின் பயனாக கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி சவுதி - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், இரு நாடுகளும் தங்கள் தூதரகங்களை திறக்க 2 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்பட்டுள்ள நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியாவில் ஈரான் தங்கள் தூதரகத்தை திறக்க உள்ளது. ரியாத்தில் ஈரான் தூதரகம் இன்று திறக்கப்பட உள்ளது. ஈரான் - சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அதிகாரிகள் இந்த தூதரக திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.

எதிர் எதிர் நாடுகளாக இருந்த சவுதி - ஈரான் தங்கள் உறவை வலுப்படுத்த தூதரகங்களை திறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் தணிந்து சற்று அமைதியான சூழ்நிலை நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story