காசாவிற்கு குடிநீர் விநியோகம்: அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு


காசாவிற்கு குடிநீர் விநியோகம்: அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு
x

கோப்புப்படம்

காசாவிற்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெருசலேம்,

இஸ்ரேல்- ஹமாஸ் போர் கடந்த 7ம் தேதி தொடங்கியது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த போர் தாக்குதலால் மக்கள் தங்களின் வீடு, உடமைகளைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

இதனிடையே போர் தொடங்கிய உடன் காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திவிட்டது. இதன்காரணமாக காசா பகுதி மக்கள் குடிநீர், உணவு இன்றி பரிதவித்து வந்தனர்.

இந்நிலையில் தெற்கு காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காசாவுக்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்திய இஸ்ரேலின் முடிவுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.


Next Story