இத்தாலியில் முதியோர் இல்லத்தில் தீ விபத்தில் 6 பேர் கருகி சாவு


இத்தாலியில் முதியோர் இல்லத்தில் தீ விபத்தில் 6 பேர் கருகி சாவு
x

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள முதியோர் இல்லம் தீப்பிடித்து 6 பேர் உடல் கருகி செத்தனர். மேலும் 80 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேகமாக பரவிய தீ

இத்தாலியில் தலைநகர் ரோமுக்கு அடுத்தபடியான பெரிய நகரமாக மிலன் விளங்குகிறது. இங்கு முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 200 முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு தங்களது அறைகளில் முதியவர்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் இந்த இல்லத்தின் ஒரு அறையில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியது.

மீட்பு பணியில் சிரமம்

இதனையறிந்த முதியவர்கள் செய்வதறியாது திகைத்தனர். சிலர் தங்களது சக்கர நாற்காலிகளில் வேகமாக கீழே இறங்கினர். ஆனால் புகை மண்டலமாக காட்சியளித்ததால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தண்ணீரை பீய்ச்சியடித்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே முதியோர் இல்லத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. ஆனாலும் நள்ளிரவு நேரத்தில் அனைவரும் தூங்கி கொண்டிருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் சிக்கி...

இதனை பொருட்படுத்தாது மீட்பு படையினர் வேகமாக களமிறங்கினர். எனினும் இந்த தீ விபத்தில் 6 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நெரிசலில் சிக்கி 80-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story