வடகொரியா அடுத்த வாரம் அணு குண்டு சோதனை நடத்த வாய்ப்பு - அமெரிக்கா


வடகொரியா அடுத்த வாரம் அணு குண்டு சோதனை நடத்த வாய்ப்பு - அமெரிக்கா
x

வடகொரியா அடுத்த வாரம் அணு குண்டு சோதனையை நடத்த அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வடகொரியாவின் அணு ஆயுத விவகாரத்தில் அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண அமெரிக்கா முனைப்பு காட்டி வரும் நிலையில் வடகொரியா அதை புறக்கணித்து வருகிறது.

இந்த நிலையில் வடகொரியா அடுத்த வாரம் அணு குண்டு சோதனையை நடத்த அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அடுத்த வாரம் தென்கொரியா, ஜப்பான் நாடுகளில் பயணம் மோற்கொள்கிறபோது வடகொரியா இந்த சோதனையை நடத்தலாம் என அமெரிக்கா கூறுகிறது.

இதுபற்றி அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், "துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வருகிற 26-ந் தேதியில் இருந்து 4 நாட்கள் தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது வடகொரியா அணு குண்டு சோதனையை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. ஒருவேளை வடகொரியா அப்படி அணு குண்டு சோதனையை நடத்தினால் அந்த நாடு கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரித்தனர். இதனிடையே நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணையை பரிசோதிக்க வடகொரியா தயாராகி வருவதற்கான அறிகுறிகளை கண்டறிந்துள்ளதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story