போலந்தின் நடவடிக்கைகள் 3-ம் உலக போரை ஏற்படுத்தும்: ரஷியா எச்சரிக்கை


போலந்தின் நடவடிக்கைகள் 3-ம் உலக போரை ஏற்படுத்தும்:  ரஷியா எச்சரிக்கை
x

ஒட்டுமொத்த உலகுக்கும் பெரிய ஆபத்துக்கான விளைவுகள் ஏற்பட கூடும் என்று மெத்வதேவ் எச்சரித்து உள்ளார்.

மாஸ்கோ,

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக நிதி, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் போலந்து நாட்டின் ராணுவ கட்டமைப்புகள் அமைவதும் மற்றும் போலந்தின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதும் காணப்படுவது, பெலாரஸ் மற்றும் ரஷியாவுக்கு எதிரான நேரடியான போரை ஏற்படுத்த கூடும் என்று ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேட்டோவிடம் இருந்து போலந்து ஆதரவை கோரினால், 3-ம் உலக போர் ஏற்பட கூடும் என நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

போலந்தின் தீங்கு ஏற்படுத்தும் நோக்கங்களில் இருந்து வளர கூடிய அச்சுறுத்தல்களை தடுக்க, முறையான பதிலடியை தருவதற்கு ரஷியாவின் கூட்டணி நாடுகள் தயாராக உள்ளன. ஒட்டுமொத்த உலகுக்கும் பெரிய ஆபத்துக்கான விளைவுகள் ஏற்பட கூடும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார்.

விரிவான அணு ஆயுத பரிசோதனை தடைக்கான ஒப்பந்த நிராகரிப்பு பற்றி ரஷிய அதிபர் புதின் பேசிய நிலையில், மெத்வதேவின் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது.

கடந்த அக்டோபர் 5-ந்தேதி புதின் பேசும்போது, அணு ஆயுத சோதனைகளை தொடங்கும்படி எனக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் உண்மையில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பது பற்றி கூற நான் தயாராக இல்லை என குறிப்பிட்டார்.


Next Story