உக்ரைனின் இறையாண்மைக்கு ஆதரவு; பிரதமர் மோடிக்கு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி


உக்ரைனின் இறையாண்மைக்கு ஆதரவு; பிரதமர் மோடிக்கு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி
x

உக்ரைன் நாட்டின் கல்வி மையங்களில் திரும்பவும் படிக்க வரும்படி, இந்திய மாணவர்களை வரவேற்கிறோம் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்து இருக்கிறார்.

கீவ்,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றுவதும், தாக்குவதும் பின்னர் அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்பதும் தொடர்ந்து வருகிறது.

இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷியா தீவிர போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளும் போரை தீவிரப்படுத்தி உள்ளன. போரை முடிவுக்கு கொண்டு வரும் தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை இதில் பெரிய பலன் எதனையும் தரவில்லை. உக்ரைன் தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை கோரி வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவ உதவியை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடியை தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அவருடன் பேசும்போது, அமைதியை அமல்படுத்துவதற்கான கூட்டங்களில் பங்கேற்று, உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு, மனிதாபிமான உதவி ஆகியவற்றிற்கு இந்தியா ஆதரவளித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவிக்க அவருடன் பேசினேன்.

அமைதிக்கான உச்சி மாநாட்டில், இந்தியாவும் பங்கேற்பது எங்களுக்கு முக்கியம் வாய்ந்தது. இந்த உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தில் தயாராகி வருகிறது என ஜெலன்ஸ்கி அவருடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் தெரிவித்து உள்ளார்.

இந்த பேச்சின்போது, எங்களுடைய இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியை பற்றியும் நாங்கள் ஆலோசித்தோம். இந்தியாவுடனான இருதரப்பு பிணைப்புகளை வலுப்படுத்துவது பற்றியும் வலியுறுத்திய அவர், உக்ரைன் நாட்டின் கல்வி மையங்களில் திரும்பவும் படிக்க வரும்படி, இந்திய மாணவர்களை வரவேற்கிறோம் என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும் உக்ரைன் ஆர்வத்துடன் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story