நாளை தைப்பூச திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவியும் பக்தர்கள்


நாளை தைப்பூச திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவியும் பக்தர்கள்
x
தினத்தந்தி 24 Jan 2024 2:19 AM GMT (Updated: 24 Jan 2024 5:47 AM GMT)

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

திருச்செந்தூர்,

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கின்றது. காலை 7.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடக்கிறது.

பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

தைப்பூசத்தன்று முருகனை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இதற்கிடையே, சுவாமி சண்முகரை கடலில் கண்டெடுத்த தினமான இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story