96 ரன்னில் இருந்த போது அதை செய்யலாம் என நினைத்தேன் ஆனால்... - ஜோ ரூட் பேட்டி


96 ரன்னில் இருந்த போது அதை செய்யலாம் என நினைத்தேன் ஆனால்... - ஜோ ரூட் பேட்டி
x

Image Courtesy: AFP

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ஜோ ரூட் 122 ரன்கள் அடித்தார்.

ராஞ்சி,

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராவ்லியும், பென் டக்கெட்டும் களமிறங்கினர்.

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் இங்கிலாந்தின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார். இதில் கிராவ்லி 42 ரன், டக்கட் 11 ரன், போப் 0 ரன்னுக்கு ஆட்டம் இழந்தனர். இதையடுத்து அனுபவ வீரர் ஜோ ரூட் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் பேர்ஸ்டோ 38 ரன், ஸ்டோக்ஸ் 3 ரன், போக்ஸ் 47 ரன், ஹார்ட்லி 13 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ராபின்சன் களம் இறங்கினார்.

நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் அவரது முதல் சதம் இதுவாகும். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 90 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 106 ரன், ராபின்சன் 31 ரன் எடுத்து களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 104.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் ரூட் 122 ரன், ராபின்சன் 58 ரன் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் ரோகித் சர்மா 2 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சுப்மன் கில் களம் இறங்கினார். கில் - ஜெய்ஸ்வால் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் கில் 38 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஒரு முனையில் ஜெய்வால் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. கில் அவுட்டான பின் களம் இறங்கிய படிதார் 17 ரன், ஜடேஜா 12 ரன், சர்பராஸ் கான் 14 ரன், அஷ்வின் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்த நிலையில் 73 ரன் எடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து துருவ் ஜூரெல் மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஜூரெல் 30 ரன், குல்தீப் யாதவ் 17 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பஷீர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் 3ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்றைய ஆட்டம் முடிந்த பின்னர் இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் அளித்த பேட்டியில் கூறியதாவது, கடந்த சில நாட்கள் எங்களுக்கு நன்றாக அமைந்தது. இப்படி சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடவே நான் விரும்புகிறேன். பிட்ச் தொடர்ந்து மோசமடைவது போல் தெரிகிறது. 96 ரன்களில் இருந்த போது ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டை அடிக்கலாம் என்ற எண்ணம் என்னுடைய மனதிற்குள் வந்தது.

ஆனால் கடந்த பிட்ச்களை விட ராஞ்சி பிட்ச்சில் பந்து தொடர்ந்து கீழே செல்கிறது. எங்களுடைய அணி வீரர்களுக்காக ரன்கள் அடிக்க விரும்பிய நான் இன்று அதை செய்ததால் மகிழ்ச்சியடைகிறேன். பென் ஸ்டோக்ஸ்க்கு தொடர்ந்து ஆலோசனை கொடுக்கிறேன். நான் கேப்டனாக இருந்த போதும் அதைத்தான் அவர் செய்தார்.

எங்களுடைய இரண்டு ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுவது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. குறிப்பாக சோயப் பஷீர் பவுலிங்கை இதற்கு முன் பார்க்காவிட்டாலும் இத்தொடரில் அவர் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நன்றாக செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story