ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்
x

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் சென்னை அணி இன்று டெல்லியை சந்திக்கிறது.

புதுடெல்லி,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 20 ஓவர் திருவிழாவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்து விட்டது. டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை முழுமையாக இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 67-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கிறது. தொடர்ந்து 68-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

டோனி தலைமையிலான சென்னை அணி இந்த சீசனில் இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. 'பிளே-ஆப்' சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க தனது கடைசி லீக்கான இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால் போதுமானதாகும். தோல்வி அடைந்தால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும்.

ஒருவேளை சென்னை அணி தோற்று லக்னோ, மும்பை, பெங்களூரு அணிகள் தங்களுடைய கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும். சென்னை அணியின் ஆட்டத்திற்கு பிறகு தான் லக்னோ, மும்பை, பெங்களூரு அணிகளின் ஆட்டங்கள் நடக்கிறது. எனவே சென்னை அணி அடுத்த சுற்றுக்குள் நுழைய வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும்.

டெல்லி அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 8 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. தனது சொந்த மண்ணில் நடைபெறும் கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க டெல்லி அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 18-ல் சென்னையும், 10-ல் டெல்லியும் வெற்றி பெற்று இருக்கின்றன.

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் லக்னோ கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் குருணல் பாண்ட்யா தலைமையிலான லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் லக்னோ வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். மாறாக தோல்வி கண்டால் மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும். அதாவது பெங்களூரு, மும்பை அணிகள் தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் வாய்ப்பு கிட்டும்.

நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவுகள் தனக்கு சாதகமாக அமைவதுடன் ரன்-ரேட்டிலும் மிக உயர்ந்த நிலையை எட்டினால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story