ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; ஜப்பானை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை..!


ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; ஜப்பானை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை..!
x

Image Courtesy: @ACCMedia1

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது.

துபாய்,

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தானும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பானும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற பி பிரிவு ஆட்டம் ஒன்றில் இலங்கை - ஜப்பான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஜப்பான் அணி இலங்கையின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த அணியில் மூன்று வீரர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். ஜப்பான் அணி 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஜப்பான் தரப்பில் சார்லஸ் ஹின்சே 36 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 12.2 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 76 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.


Next Story