மெஹிதி ஹசன் மிராஸ் போராட்டம் வீண்; வங்காளதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை


மெஹிதி ஹசன் மிராஸ் போராட்டம் வீண்; வங்காளதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை
x

Image Courtesy: AFP 

இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட், காமிந்து மெண்டிஸ் 3 விக்கெட் எடுத்தனர்.

சட்டோகிராம்,

இலங்கை - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை அணி 531 ரன்னும், வங்காளதேச அணி 178 ரன்னும் எடுத்தன.

353 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 40 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பிரபாத் ஜெயசூர்யா 28 ரன்னுடனும், விஷ்வா பெர்னாண்டோ 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து 511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி வங்காளதேச அணி 2-வது இன்னிங்சை ஆடியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 67 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 268 ரன்களுடன் தோல்வியின் விளிம்பில் தத்தளித்தது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் மெஹிதி ஹசன் மிராஸ் 44 ரன்களுடனும், தைஜூல் இஸ்லாம் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 5ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேச அணி தனது 2வது இன்னிங்சில் 85 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 318 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 192 ரன் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது. வங்காளதேச தரப்பில் வெற்றிக்காக போராடிய மெஹிதி ஹசன் மிராஸ் 81 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட், காமிந்து மெண்டிஸ் 3 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை முழுமையாக கைப்பற்றியது. இரு அணிகளுகும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 328 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story