ரஞ்சி கிரிக்கெட் அரையிறுதி; தமிழ்நாடு - மும்பை ஆட்டம் இன்று தொடக்கம்


ரஞ்சி கிரிக்கெட் அரையிறுதி; தமிழ்நாடு - மும்பை ஆட்டம் இன்று தொடக்கம்
x

Image Courtesy: @BCCIdomestic

இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா - மத்தியபிரதேச அணிகள் மோதுகின்றன.

மும்பை,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கும் ஒரு அரையிறுதியில் தமிழக அணி, 41 முறை சாம்பியனான மும்பை அணியை (5 நாள் ஆட்டம்) எதிர்கொள்கிறது.

காலிறுதியில் நடப்பு சாம்பியன் சவுராஷ்டிராவை விரட்டிய தமிழக அணி நம்பிக்கையுடன் காணப்படுகிறது. முக்கியமான இந்த ஆட்டத்திற்கு பேட்ஸ்மேன் சாய் சுதர்சன், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் வருகை தந்திருப்பது தமிழக அணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

அதேவேளையில் பரோடாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அதே ஆட்டத்தை அரையிறுதிலும் வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. அஜிங்யா ரஹானே தலைமையிலான மும்பை அணியில், கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து கழற்றி விடப்பட்ட ஸ்ரேயாஸ் இணைந்துள்ளார். இதனால் அந்த அணியின் பேட்டிங் அசுர பலம் கண்டுள்ளது.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. நாக்பூரில் நடக்கும் மற்றொரு அரையிறுதியில் விதர்பா - மத்தியபிரதேச அணிகள் மோதுகின்றன.


Next Story