இலங்கை-வங்காளதேசம் கடைசி டெஸ்ட்: 5-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது


இலங்கை-வங்காளதேசம் கடைசி டெஸ்ட்: 5-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது
x

Image Courtesy : @OfficialSLC

வங்காளதேச அணி 67 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 268 ரன்களுடன் தோல்வியின் விளிம்பில் தத்தளிக்கிறது.

சட்டோகிராம்,

இலங்கை - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை அணி 531 ரன்னும், வங்காளதேச அணி 178 ரன்னும் எடுத்தன.

353 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 40 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பிரபாத் ஜெயசூர்யா 28 ரன்னுடனும், விஷ்வா பெர்னாண்டோ 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து 511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி வங்காளதேச அணி 2-வது இன்னிங்சை ஆடியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி ஆட்ட நேரம் முடிவில் 67 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 268 ரன்களுடன் தோல்வியின் விளிம்பில் தத்தளிக்கிறது.

அதிகபட்சமாக மொமினுல் ஹக் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மெஹிதி ஹசன் மிராஸ் 44 ரன்களுடனும், தைஜூல் இஸ்லாம் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் லஹிரு குமரா, பிரபாத் ஜெயசூர்யா, காமிந்து மென்டிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


Next Story