இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை


இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை
x

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில், வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது.

புதுடெல்லி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில், வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடரில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளிப்பார்கள் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே சமயம் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் இந்திய பேட்ஸ்மேன்களும் திணறுவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் சுழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

எனவே இம்முறை சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் நீங்கள்தான் ஆரம்பத்திலே அதிரடியாக விளையாடி மிடில் ஆர்டர்களின் அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்று கேப்டன் ரோகித் சர்மாவை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக 2021 டெஸ்ட் தொடரில் இதே இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் சவாலான பிட்ச்சில் அதிரடியாக சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்ததுபோல் இம்முறையும் நீங்கள் செயல்பட வேண்டும் என்று ரோகித்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது ;- "சென்னை டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடி சதமடித்த விதம் நன்றாக இருந்தது. குறிப்பாக அப்போட்டியில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் அவர் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை காண்பித்தார். ஒருவேளை இந்த தொடரிலும் அவர் அதே வழியில் தொடர்ந்து பேட்டிங் செய்தால் கண்டிப்பாக இந்தியாவுக்கு நல்ல துவக்கம் கிடைக்கும். மேலும் அது 3, 4வது இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்கும்.

முதல் போட்டி நடைபெறும் ஐதராபாத் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்குமா என்பதை கேப்டனாக அவர் பார்க்க வேண்டும். ஒருவேளை அப்போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து உணவு இடைவெளி வரை விக்கெட் எடுக்காமல் போனால் ரோகித் சர்மா தம்முடைய பவுலர்களை எப்படி மாற்றி மாற்றி அட்டாக் செய்கிறார் என்பதை பார்க்க ஆவலாக இருக்கும். இந்த போட்டியில் நாம் அவரின் கேப்டன்ஷிப்பை பார்த்து மதிப்பிடலாம்" இவ்வாறு அவர் பேசினார்.


Next Story