இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; கோலிக்கு பதிலாக இவர் தான் விளையாட வேண்டும்...ஆனால் - ஆகாஷ் சோப்ரா


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; கோலிக்கு பதிலாக இவர் தான் விளையாட வேண்டும்...ஆனால் - ஆகாஷ் சோப்ரா
x

Image Courtesy: PTI

தினத்தந்தி 23 Jan 2024 4:24 PM GMT (Updated: 24 Jan 2024 1:28 AM GMT)

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

புதுடெல்லி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி வரும் 25-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

அந்த அணிக்கு ரோகித் கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த அணியில் சீனியர் வீரரான விராட் கோலி இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரு போட்டிகளில் இருந்து விலகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

விராட் கோலிக்கு பதிலாக மாற்று வீரர் பின்னர் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு பதிலாக அணியில் இடம் பிடிக்க இளம் வீரர்களான சர்ப்ராஸ் கான் மற்றும் ரஜத் பட்டிதருக்கு இடையே போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் விராட் கோலியின் இடத்தில் புஜாரா தான் விளையாடுவதற்கு தகுதியானவர் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அவரை (புஜாரா) உங்களால் தேர்வு செய்ய முடியும். இருப்பினும் இந்தியா அந்த வழியில் நகரும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் ஏற்கனவே அவர்கள் இளம் வீரர்களை நோக்கி நகர்ந்துள்ளார்கள்.

நியாயப்படி அந்த இடத்தில் விளையாட புஜாரா சரியான தேர்வு. ஆனால் தேர்வுக் குழுவினர் அவரையும் இந்திய அணியில் தேர்வு செய்வதற்கான ஒருவராக பார்க்கிறார்களா என்பது முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story