சுரேஷ் குமார், சுதர்சன் அதிரடி: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வென்றது கோவை கிங்ஸ்..!


சுரேஷ் குமார், சுதர்சன் அதிரடி: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வென்றது கோவை கிங்ஸ்..!
x

image courtesy: TNPL twitter

இன்று நடைபெற்ற போட்டியில் கோவை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கோவை,

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது. அடுத்த கட்ட போட்டிகள் தற்போது கோவையில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 3.15 மணிக்கு தொடங்கிய 20 வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

திருப்பூர் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அரவிந்த் மற்றும் ஶ்ரீகாந்த் இருவரும் முறையே 27 மற்றும் 39 ரன்கள் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அடுத்ததாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 21 ரன்கள், ராகேஜா 20 ரன்கள், ராஜ்குமார் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. மான் 20 ரன்கள் மற்றும் அஸ்வின் 10 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது.

கோவை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கங்கா ஶ்ரீதர் ராஜூ 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக இணைந்த சுரேஷ் குமார், சாய் சுதர்சன் ஜோடி அதிரடியாக ஆடியது. சுரேஷ் குமார் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி 83 ரன்களும் சாய் சுதர்சன் 9 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என 68 ரன்களும் எடுத்தனர்.

15.2 ஓவரில் கோவை அணி 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 28 பந்துகள் மீதம் வைத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி கோவை அணி வெற்றி பெற்றது.


Next Story