டி20 உலகக் கோப்பை: "இந்த வெற்றிக்கு பாகிஸ்தான் அணி தகுதியானது தான்"- கேன் வில்லியம்சன்


டி20 உலகக் கோப்பை: இந்த வெற்றிக்கு பாகிஸ்தான் அணி தகுதியானது தான்- கேன் வில்லியம்சன்
x

Image Tweeted By BLACKCAPS

நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

சிட்னி,

8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கேப்டன் கேன் வில்லியம்சுடன், டேரில் மிட்செல் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிகேப்டன் பாபர் அசாம்- முகமது ரிஸ்வான் அதிரடியால் 19.1 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 153 ரன்கள் எடுத்து இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தோல்வியை ஏற்று கொள்ள கடினமாக இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு அழுத்தத்தை கொடுத்தனர். எனினும் மிடில் ஓவர்களில் டேரில் மிட்செலின் அதிரடியால் நல்ல நிலையில் பேட்டிங்கை முடித்தோம்.

இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிட்ச் என்பதால் இங்கு இந்த ஸ்கோரே போதுமானதாக இருக்கும் என கணித்தோம். ஆனால் எங்கள் கணிப்பு தவறாகிவிட்டது. பாகிஸ்தான் அணி இவ்வளவு சுலபமாக வெற்றி பெற்றதை ஏற்று கொள்ள கடினமாக உள்ளது.

எனினும் அவர்கள் அந்த அளவிற்கு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். எனவே இந்த வெற்றிக்கு பாகிஸ்தான் அணி தகுதியானது தான்" என தெரிவித்தார்.


Next Story