இந்திய மகளிர் ஆக்கி; ஜெர்மனி சுற்றுப்பயணம்...சீனாவுடன் மோதல்...!


இந்திய மகளிர் ஆக்கி;  ஜெர்மனி சுற்றுப்பயணம்...சீனாவுடன் மோதல்...!
x

image courtesy;ANI

இந்திய மகளிர் ஆக்கி அணி 3 நாடுகளுக்கு இடைப்பட்ட தொடரில் விளையாட ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது.

டெல்லி,

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி இந்த மாதத்தில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய அணி முதலில் ஜெர்மனிக்கு சென்று உள்ளது.அங்கு இரண்டு ஆட்டங்களில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இன்று தொடங்கும் முதல் போட்டியில் லிம்பர்க் மைதானத்தில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.

அதன்பின், ஜூலை 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் ஜெர்மனி அணி உடன் மோத உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணிக்கு கோல் கீப்பர் சவிதா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். துணை கேப்டனாக டீப் கிரேஸ் எக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனா உடனான போட்டி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் சவிதா கூறுகையில்,'இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.எனெனில்,வரும் ஆசிய கோப்பை தொடரில் சீனாவும் பங்கேற்க உள்ளது.இந்த போட்டியின் மூலம் எதிரணியின் பலம், எங்களது பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்ள உதவும்.பெங்களூரில் உள்ள சாய் தேசிய பயிற்சி முகாமில் நாங்கள் நீண்ட கால பயிற்சி மேற்கொண்டு இந்த தொடருக்கு நல்ல முறையில் தயாராகி உள்ளோம்.அணி நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு உள்ளது.இதனால் இனி வரும் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்' என்று அவர் கூறி உள்ளார்.

இந்த போட்டி குறித்து பேசிய துணை கேப்டன் கூறுகையில்,' சீன அணியின் ஆட்டம் மற்றும் அனுகுமுறை எங்களுக்கு நன்கு அறிந்த ஒன்று.கடந்த காலங்களில் அந்த அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளோம்.அதே வேளையில் அவர்களை குறைத்து மதிப்பிட மாட்டோம். எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சிப்போம்'' என்று கூறி உள்ளார்.

2013 முதல் இந்திய அணி சீனா உடன் 17 போட்டிகளில் விளையாடி உள்ளது.அதில் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story