டெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பு; சீனாவுக்கு சிக்கல்


டெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பு; சீனாவுக்கு சிக்கல்
x
தினத்தந்தி 16 Feb 2020 11:15 PM GMT (Updated: 16 Feb 2020 9:26 PM GMT)

டெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு இந்திய அரசு நேற்று முன்தினம் விசா வழங்கி அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி, 

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 23-ந்தேதி வரை டெல்லியில் நடக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியினர் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில் அவர்களுக்கு மத்திய அரசு விசா வழங்கியுள்ளது. இது குறித்து இந்திய மல்யுத்த சம்மேளன உதவிச் செயலாளர் வினோத் தோமர் கூறுகையில், ‘ஒட்டுமொத்த பாகிஸ்தான் குழுவினருக்கும் இந்திய அரசு நேற்று முன்தினம் விசா வழங்கி அனுமதி அளித்துள்ளது. முந்தைய நாள் மத்திய விளையாட்டுத்துறை செயலாளர் ராதே ஷியாம் ஜூலானியாவை சந்தித்து பேசிய பிறகு அவர் உடனடியாக உள்துறை செயலாளரின் கவனத்துக்கு கொண்டு சென்று விசா பிரச்சினையை சரி செய்து விட்டார். இந்த நடைமுறை சரியாக அமைவதற்கு இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ராவும் முக்கிய பங்கு வகித்தார்’ என்றார்.

பாகிஸ்தான் மல்யுத்த அணியில் முகமது பிலால் (57 கிலோ), அப்துல் ரகுமான் (74 கிலோ), தயாப் ராசா (97 கிலோ), ஜமான் அன்வர் (125 கிலோ) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு இந்திய மண்ணில் நடக்கும் போட்டிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு அணி கலந்து கொள்ள இருப்பது இதுவே முதல் முறையாகும்.

அதே சமயம் இந்த போட்டியில் 40 பேர் கொண்ட வலுவான சீனா அணி பங்கேற்க திட்டமிட்டுள்ளது. ஆனால் சீனாவில் பரவும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் காரணமாக அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களுக்கு மத்திய அரசு விசா வழங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் வினோத் தோமர் தெரிவித்தார்.

Next Story