ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி


ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி
x
தினத்தந்தி 18 Aug 2023 7:30 AM GMT (Updated: 18 Aug 2023 7:52 AM GMT)

இந்திய அணி தனது கடைசி தகுதி சுற்று போட்டியில் 66-79 என்ற புள்ளி கணக்கில் பக்ரைன் அணியிடம் வீழ்ந்தது.

டமாஸ்கஸ்,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் நடைபெற உள்ள கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற ஆசிய அணிகளுக்கான முதற்கட்ட தகுதி சுற்று ஆட்டங்கள் சிரியாவில் நடைபெற்று வந்தன. இதில் இந்தியா, பக்ரைன், கஜகஸ்தான், சவுதி அரேபியா, இந்தோனேஷியா மற்றும் சிரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்று இருந்தன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும். அதில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதன் அடிப்படையில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் பக்ரைன் அணி உடன் மோதியது.

இந்த போட்டியில் பக்ரைன் அணி 79-66 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த தகுதி சுற்று போட்டிகளில் இந்திய அணி 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி மற்றும் 3 தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய கூடைப்பந்து அணியின் ஒலிம்பிக் கனவு முடிவடைந்தது.

இந்த தகுதி சுற்று போட்டிகளில் பக்ரைன் அணி தோல்வியே சந்திக்காமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story