பிறந்தநாளையொட்டி நடிகர் மம்முட்டி பகிர்ந்த பதிவு
மம்முட்டி தனது புகைப்படத்தைப் பகிர்ந்து, “கடவுளுக்கும், அனைவருக்கும் அன்பும் நன்றியும்” எனக் கூறியுள்ளார்.;
மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான மம்முட்டி 74 வயதிலும் தோற்றத்தில் இளமையாகவே இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பசூகா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியான தோல்வியைச் சந்தித்தது. தற்போது, களம் காவல் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். அடுத்ததாக, மோகன்லாலுடன் பேட்ரியாட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு புற்றுநோய் பாதித்ததாக வதந்திகள் பரவின. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. வழக்கமாக, ஒன்றிரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் மம்முட்டி , கடந்த சில மாதங்களுக்கும் ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார்.
தற்போது, தனது எக்ஸ் பக்கத்தில் மம்முட்டி தனது புகைப்படத்தைப் பகிர்ந்து, “கடவுளுக்கும், அனைவருக்கும் அன்பும் நன்றியும்” எனக் கூறியுள்ளார். நடிகர் மம்முட்டி பகிர்ந்த புதிய பதிவு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல்நிலை குறித்து வதந்திகள் வெளியான நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மகேஷ் நாராயணனின் புதிய படத்தின் படப்பிடிப்பில் மம்முட்டி விரைவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.