நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
குழந்தை இல்லாத பெண்கள் காந்திமதி அம்மன் சன்னதியில் கொடியேறிய பின்பு 10 நாட்களும் விரதம் கடைபிடித்து வருவார்கள்.;
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
4-ம் திருவிழாவான 21-ம்தேதி (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு 8 மணிக்கு காந்திமதி அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 10-ம் திருநாளான வருகிற 27-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.
அப்போது காந்திமதி அம்மனை கர்ப்பிணி பெண் போல் அலங்கரித்து மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் படைக்கப்படும். தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார்.
அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயிரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த சிறுபயிரை குழந்தை இல்லாத பெண்கள் வாங்கி சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இந்த சிறுபயிரை வாங்க பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இதற்காக குழந்தை இல்லாத பெண்கள் அம்மன் சன்னதியில் கொடியேறிய பின்பு 10 நாட்களும் விரதம் கடைபிடித்து வருவார்கள்.