குலசேகரன்பட்டினம்: அரசு பஸ் மீது பைக் மோதிய விபத்தில் பக்தர்கள் 2 பேர் பலி

திருநெல்வேலி மாவட்டம், ஆவுடையாள்புரத்தை சேர்ந்த 3 பேர் மாலை அணிந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று, திருவிழா முடிந்து ஒரே பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.;

Update:2025-10-04 21:54 IST

துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதி அருகே ஆவுடையாள்புரத்தை சேர்ந்த குருமூர்த்தி (வயது 21), ரஞ்சித்(18), பாரத்(18) ஆகிய 3 பேர் மாலை அணிந்து கோவிலுக்கு சென்றனர். திருவிழா முடிந்து ஒரே பைக்கில் நேற்று அதிகாலை அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

குருமூர்த்தி பைக்கை ஓட்டியுள்ளார். அந்த பைக் மணப்பாடு செல்லும் சாலை வளைவில் திரும்பியபோது, எதிரே நாகர்கோவிலில் இருந்து வந்த அரசு பஸ் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேரும் துாக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே குருமூர்த்தி, ரஞ்சித் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பாரத் திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்