கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப்.. இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் இன்று நடைபெறுகிறது.;

Update:2026-01-05 00:22 IST

சென்னை,

கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்புதிட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற உலகம் உங்கள் கையில் என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 லட்சம் லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இன்று தொடக்கம்

அந்த அறிவிப்பின்படி, இத்திட்டம் மாநிலம் முழுவதும் 2 கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக 10 லட்சம் லேப் டாப்கள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் 10 லட்சம் லேப் டாப்கள் வழங்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு

கல்வி அனைவருக்கும், உயர்வு ஒவ்வொருவருக்கும் என்ற நோக்கத்துடன் தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த டெல், ஏ.சி.இ.ஆர். எச்.பி. போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் லேப் டாப்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த லேப் டாப்களில் இன்டல் ஐ-3,8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. நினைவகம், விண்டோஸ் 11 ஹோம் மற்றும் மென்பொருள்கள், எம்.எஸ். ஆபீஸ் 365 என ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர லேப் டாப் பையும் வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்ப துறை, மென்பொருள் உருவாக்கம், தரவு உள்ளீடு, டிஜிட்டல் சந்தைப்படுத்தல், வரைகலை வடிவமைப்பு, குறியிடுதல், வலை வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு கருவிகள் போன்ற துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட உதவுகிறது.

இதனால் குடும்ப வருமானம் உயர்ந்து, கிராம–நகர இடைவெளி குறைந்து, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழில் முயற்சிகளும் உருவாகும் வாய்ப்பு அமையும். உலகம் உங்கள் கையில் என்ற தமிழ்நாட்டின் மாபெரும் டிஜிட்டல் கனவையும் நனவாக்கும் வரலாற்றுப் பெருமைகள் சேர்க்கும் மாபெரும் கல்விப் புரட்சித் திட்டமாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்