விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு: சேலம் ராஜகணபதிக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்

விநாயகர் சதுர்த்தி நாளில் சேலம் ராஜகணபதிக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
சேலம் கடைவீதியில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. தினமும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. விநாயகர் சதுர்த்தி நாளில் சாமிக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளான இன்று காலையில் மஞ்சள் நீராட்டு, வசந்த உற்சவம் நடந்தது. தொடர்ந்து மூலவர் ராஜகணபதிக்கு மஞ்சள், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், குங்குமம், நெய், தேன் உள்பட பல்வேறு பொருட்களாலும், சாத்துக்குடி, ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை போன்ற பழச்சாறுகளால் சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் செய்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் 1008 லிட்டர் பாலால் அபிஷேகம் செய்து பூஜை நடந்தது. இதையடுத்து 2 டன் வண்ண, வண்ண பூக்களால் சாமிக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






