தேச பாதுகாப்பிற்காக முப்படைகள் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும்: ராணுவ அதிகாரி பேட்டி

இந்தியாவின் எஸ்.-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்து விட்டோம் என பாகிஸ்தான் கூறியது பொய் என்று கர்னல் சோபியா குரேஷி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாவாசிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பதிலடியாக பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்திற்கான சூழல் உருவானது. பாகிஸ்தான் தரப்பில் நடந்த தாக்குதல்களை இந்தியா தொடர்ந்து முறியடித்தது.
இந்நிலையில், இரு நாடுகளின் தரப்பிலும் சண்டையை உடனடியாக நிறுவத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி மத்திய அமைச்சகம் சார்பில் முப்படை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தனர். இதுபற்றி கர்னல் சோபியா குரேஷி கூறும்போது, இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை தளங்களை, எஸ்.-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்து விட்டோம் என பாகிஸ்தான் கூறியது பொய் என கூறியுள்ளார்.
இந்திய விமானப்படை, மசூதிகளை தாக்கியது என பாகிஸ்தான் பொய் தகவல்களை பரப்பியது. வழிபாட்டு தலங்களை இந்தியா தாக்கவில்லை. எனினும், பாகிஸ்தான் தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது என்றார்.
இதேபோன்று விமான படையை சேர்ந்த உயரதிகாரியான வியோமிகா சிங் கூறும்போது, எங்களுடைய நடவடிக்கைகள், குறிப்பிடும்படியாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மற்றும் அமைப்புகளை இலக்காக கொண்டு செயல்பட்டன.
இந்திய ஆயுத படைகளால், எந்தவொரு மத வழிபாட்டு தலமும் இலக்காக கொள்ளப்படவில்லை என கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக, நாம் பார்த்ததுபோல், பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டது. மீள முடியாத இழப்புகளை எதிர்கொண்டது.
நிலம் மற்றும் வான்வழியே பெருமளவில் அந்நாடு இழப்புகளை சந்தித்துள்ளது. பாகிஸ்தானின் விமான படை தளங்களான ஸ்கார்டு, ஜகோபாபாத் மற்றும் பொலாரி ஆகியன கடுமையாக சேதம் அடைந்தன.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், விரிவான மற்றும் குறிப்பிட்ட சேதம் ஏற்படுத்தினோம். அந்நாட்டின் ராணுவ உட்கட்டமைப்பு, படைகளுக்கான கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் தளவாடங்களின் கிடங்குகள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் தாக்குதலுக்கான திறன் வாய்ந்த கட்டமைப்புகளை நம்முடைய அதிகாரிகள் முழு அளவில் தாக்கினர் என்று கூறியுள்ளார்.
இதேபோன்று ராணுவ அதிகாரி ரகு நாயர் கூறும்போது, இந்தியா மதசார்பற்ற நாடு என தெளிவுப்படுத்த விரும்புகிறோம். பாகிஸ்தானின் மனவுறுதியை நம்முடைய ராணுவ வீரர்கள் முற்றிலும் சீர்குலைத்தனர்.
தேச பாதுகாப்பிற்காக முப்படைகள் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும். இந்தியாவின் இறையாண்மையை பாதுகாத்து கொள்வதில் எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என கூறியுள்ளார். ஜம்மு, பதன்கோட், பூஜ் பகுதிகளில் விமான நிலையங்கள் சேதம் என்பது பொய்யான தகவல்.
பாகிஸ்தானின் ஒவ்வோர் அத்துமீறலையும் இந்தியா வலிமையுடன் எதிர்கொண்டது. இனியும் பாகிஸ்தான் அத்துமீறல்களை நிகழ்த்தினால் அது உரிய வகையில் கையாளப்படும் என்று அவர் கூறினார்.