பா.ம.க. செயல் தலைவராக காந்திமதி நியமனம் - ராமதாஸ் அறிவிப்பு

கட்சிக்கும், தனக்கும் பாதுகாப்பாக காந்திமதி இருப்பார் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையேயான கருத்து மோதல் இன்னும் நீடித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் அன்புமணி ராமதாஸ் பதில் அளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து செப்டம்பர் 4-ந் தேதி தைலாபுரத்தில் பா.ம.க. மாநில நிர்வாக குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு அவர் செப்டம்பர் 10-ந் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றால், அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
ஆனால் அந்த கெடு முடிந்த பிறகும் அன்புமணி ராமதாஸ் எந்தவித பதிலும் அளிக்காததால், அவரை கட்சியின் செயல்தலைவர் பதவி மட்டுமின்றி, அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார். அதே சமயம், அன்புமணி ராமதாஸ் தரப்பு இதனை ஏற்கவில்லை. அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரமில்லை என்றும், கட்சி விதிகளின்படி அன்புமணியே பா.ம.க.வின் தலைவர் என்றும் பா.ம.க. செய்தித்தொடர்பாளர் பாலு தெரிவித்தார்.
இந்த நிலையில், தர்மபுரியில் ராமதாஸ் தலைமையில் இன்று ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பா.ம.க. செயல்தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். கட்சிக்கும், தனக்கும் பாதுகாப்பாக காந்திமதி இருப்பார் என ராமதாஸ் தெரிவித்தார்.
மேலும் பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக தமிழ்க்குமரனை நியமத்த ராமதாஸ், தமிழ்நாட்டிற்கு தமிழ்க்குமரன் பெருமை சேர்ப்பார் என்று குறிப்பிட்டார். முன்னதாக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், 96,000 கிராமங்களுக்கு சென்று இரவு, பகலாக மேடு பள்ளம் கடந்து கட்சியை வளர்த்தேன் என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் இருப்பதுதான் சத்திய தர்மம் என்று தெரிவித்தார். இதற்கிடையில், ராமதாசின் அறிவிப்பு குறித்து திருப்பூரியில் அன்புமணி ராமதாசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “கட்சி உள்விவகாரம் தொடர்பாக எந்த பதிலும் அளிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.






