தமிழ்நாட்டிலும் பா.ஜனதா வாக்குத்திருட்டில் ஈடுபடலாம்- திருமாவளவன்

தேர்தல் கமிஷன் முழுமையாக பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று திருமாவளவன் விமர்சித்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் பல்வேறு மாநில தேர்தல்களில் வாக்குத்திருட்டு நடைபெறுவதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எடுத்துரைத்து வருகிறார். தற்போது பீகாரில் வாக்குத்திருட்டுக்கு எதிராக அவர் மேற்கொண்டுள்ள பயணம் வெற்றி பெற வேண்டும். இந்த பயணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்க இருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் அதில் பங்கேற்க முடியவில்லை.
வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டிலும் வாக்குத்திருட்டு முயற்சி நடைபெறலாம். பா.ஜனதா மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பெயர்களை நீக்குவது, சேர்ப்பது, அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களை இங்குள்ள வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது என இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு அநீதியை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் கமிஷன் முழுமையாக பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கடைசிவரை நாடாளுமன்றத்தில் பீகாரின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி அவர்கள் விவாதிக்கவில்லை. அதேபோல 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவியை பறிக்கும் சட்டத்திருத்தம் பாசிசத்தின் உச்சம்.
இவ்வாறு அவர் கூறினார்.






