ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் பணியிடை நீக்கம்

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பெங்களூரு,
கர்நாடக அரசு, ஆர்.எஸ்.எஸ்.க்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் யாரும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா ரோடலபண்டா கிராம பஞ்சாயத்தில் வளர்ச்சி அதிகாரியாக பிரவீன் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் லிங்கசுகூர் சட்டசபை தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. மானப்பா வஜ்ஜலின் தீவிர ஆதரவாளரும் ஆவார். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி லிங்கசுகூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட பிரவீன்குமார், எம்.எல்.ஏ. மானப்பா வஜ்ஜலுடன் சேர்ந்து ஆர்.எஸ்.எஸ். சீருடையில் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுபற்றி விசாரணை நடத்திய பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் அருந்ததி சந்திரசேகர், அதிகாரி பிரவீன்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது அரசு அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






