காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

மீனவர்கள் எவரேனும் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருப்பின் உடனடியாக கரை திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இன்று (அக்.21) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,
சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையத்தின் 21-10-2025 நாளிட்ட அறிக்கையின்படி,
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியின்மேலே 5.8 கி.மீ உயரம் வரை பரவியுள்ள மேல் வளிமண்டல சுழற்சி தற்போது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவி வருகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் அந்த பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு-வடமேற்குப் போக்கில் நகர்ந்து, அதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் தெற்குப் பசுமை வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 21-.10-2025 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மீனவர்கள் எவரேனும் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருப்பின் உடனடியாக கரை திரும்பவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தங்கள் கிராமங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்களுக்கு தகவல் தெரியும் பொருட்டு இதனை உரிய வகையில் அறிவிப்பு செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






