ஆஸி. வீராங்கனைகளுக்கு இளைஞர் பாலியல் தொல்லை; பாஜக மந்திரி சர்ச்சை கருத்து

மகளிர் உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
இந்தூர்,
மகளிர் உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது. இதில் கடந்த 25ம் தேதி .மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற போட்டிக்காக ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இந்தூரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தனர்.
இதனிடையே, ஓட்டலில் தங்கி இருந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளில் 2 பேர் அருகில் உள்ள ஓட்டலுக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது, அவர்களை பைக்கில் பின் தொடர்ந்து வந்த நபர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக அகியூல் என்ற நைத்ரா (29 வயது) என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக மத்தியபிரதேச பாஜக மந்திரி கைலாஷ் விஜய்வர்கியா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எப்போதாவது வீராங்கனைகள் வெளியே செல்லும்போது, நாம் வெளியே செல்லும்போதுகூட உள்ளூரை சேர்ந்த ஒருவரிடம் நாம் கூறிவிட்டுதான் செல்வோம். மைதானம், ஓட்டலை விட்டு வெளியே செல்லும்போது பாதுகாவலர்கள் அல்லது நிர்வாக அதிகாரிகளிடம் கூறிவிட்டு செல்ல வேண்டும். இதை வீராங்கனைகள் எதிர்காலத்தில் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். கிரிக்கெட் வீரர்-வீராங்கனைகளுக்கு இங்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இங்கிலாந்தில் கால்பந்தை போன்று இந்தியாவில் கிரிக்கெட். கால்பந்து வீரர்களின் உடைகள் கிழிக்கப்படுவதை நான் பார்த்துள்ளேன்.
நாங்கள் ஓட்டலில் இருந்தபோது ஓட்டலுக்கு நிறைய இளைஞர்கள் வந்து வீரர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். அப்போது ஒரு இளம்பெண் வீரருக்கு முத்தம் கொடுத்தார். அந்த வீரரின் உடைகள் கிழிக்கப்பட்டன. அவர் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர் ஆவார். சில நேரங்களில் வீரர்களுக்கு அவர்கள் மிகவும் பிரபலமானவர்கள் என்பது தெரியாது. அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வீராங்கனைகளுக்கு நடந்த இந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடம். நமக்கு மட்டுமின்றி வீராங்கனைகளுக்கும் ஒரு பாடம்’ என்றார். பாஜக மந்திரியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.






