மனைவி தொல்லையால் புதுமாப்பிள்ளை தற்கொலை... திருமணமான 8 மாதங்களில் சோகம்

புதுமாப்பிள்ளை ககன் ராவ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு கிரிநகர் பகுதியில் வசித்து வந்தவர் ககன்ராவ் (வயது 29). இவர் வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மேகனா ஜாதவ். இருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணமான புதிதில் சந்தோஷமாக சென்ற புதுமண தம்பதியின் வாழ்க்கையில் சமீபகாலமாக குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதாவது மேகனா ஜாதவ், தனது கணவரிடம் எந்த காரணமுமின்றி அடிக்கடி தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த தகராறு நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. இதனால் புதுமாப்பிள்ளை ககன் ராவ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினமும் ககன்ராவிடம், அவரது மனைவி தகராறு செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த ககன்ராவ் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி அவர் தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அறிந்ததும் ககன்ராவின் குடும்பத்தினர் கதறி அழுதனர். சம்பவம் பற்றி தககவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, தற்கொலை செய்த ககன்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த தற்கொலை தொடர்பாக ககன்ராவின் சகோதரி, கிரிநகர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.
அதில், தனது அண்ணனின் சாவுக்கு அவரது மனைவி மேகனா ஜாதவ் தான் காரணம். அவர் திருமணமான நாள் முதல் ககன்ராவை கொடுமைப்படுத்தி மனரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். அவரது தூண்டுதலால் ககன்ராவ் தற்கொலை செய்து கொண்டார். எனவே மேகனா ஜாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பிறகு தான் ககன்ராவ் தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவி தொல்லையால் புதுமாப்பிள்ளை திருமணமான 8 மாதங்களிலேயே தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.






