மராட்டியம், கர்நாடகாவை தொடர்ந்து பீகாரிலும் வாக்கு திருட முயற்சி; ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கதிகாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பா.ஜனதா மற்றும் தேர்தல் கமிஷனை கடுமையாக சாடினார்.
கதிகார்,
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி, வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரை நடத்தி வருகிறார். இதில் கதிகாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், பா.ஜனதா மற்றும் தேர்தல் கமிஷனை கடுமையாக சாடினார்.
அவர் கூறுகையில், ‘அதிகாரத்தையும் செல்வத்தையும் குவிப்பதை ஊக்குவிப்பதன் மூலம் அரசியலமைப்பை அழிக்க முயற்சிக்கும் பா.ஜனதா, தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினருக்கான வாய்ப்புகளின் கதவுகளை மூடியிருக்கிறது. பின்தங்கிய பிரிவினரை மேம்படுத்த அவர்கள் விரும்பவில்லை’ என குற்றம் சாட்டினார்.
மேலும் அவர், ‘எனவே மக்களின் வாக்குகளை திருட முயற்சிக்கிறார்கள். அந்தவகையில் கர்நாடகா, மராட்டியம், அரியானாவில் முன்பு வாக்குகளை திருடினார்கள். தற்போது பீகாரிலும் அதை முயற்சிக்கிறார்கள். எனவே நாங்கள் இந்த வாக்காளர் உரிமை யாத்திரையை நடத்துகிறோம்’ என்றும் கூறினார்.






