ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் இன்று ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தையொட்டி சுதந்திர பூங்காவில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பெங்களூரு,
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பா.ஜனதா தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகத்தில் பெங்களூரு மத்திய தொகுதியில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் பா.ஜனதா மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடுகளை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் பெங்களூரு சுதந்திர பூங்காவில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி முக்கிய உரையாற்றுகிறார். காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தையொட்டி சுதந்திர பூங்காவில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.






