டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ரூ.31 லட்சம் மோசடி - மர்மநபருக்கு வலைவீச்சு


டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ரூ.31 லட்சம் மோசடி - மர்மநபருக்கு வலைவீச்சு
x

கோப்புப்படம் 

2 வாரங்களுக்கு பிறகுதான் முன்னாள் நீதிபதிக்கு, தான் டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கி பணத்தை இழந்தது தெரியவந்தது.

மும்பை,

மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தை சேர்ந்த 71 வயது முதியவர், மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த மாதம் 25-ந்தேதி நீதிபதிக்கு அடையாளம் தெரியாத செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் நீதிபதியின் செல்போன் எண்ணில் இருந்து 40 பேருக்கு ஆபாச செய்திகள் அனுப்பட்டு உள்ளதாகவும், மேலும் உங்கள் வங்கிக்கணக்கு மோசடிக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.

இதன் பின்னர் வீடியோகால் மூலம் முன்னாள் நீதிபதியை தொடர்புகொண்ட நபர், “தங்களது வங்கி கணக்கு மூலம் ரூ.30 லட்சம் மோசடி நடந்துள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுபடி உங்களுக்கு எதிராக விசாரணை நடந்து வருகிறது" என்று கூறினார். இதைக்கேட்டு முன்னாள் நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அந்த மோசடி நபர், நீதிபதியிடம் 2 தனித்தனி வங்கிக் கணக்குகளில் ரூ.31 லட்சத்தை டெபாசிட் செய்யுமாறு வற்புறுத்தினார். மேலும் விசாரணையின்போது அவருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் அந்த தொகையை திரும்பி தருவதாக உறுதி அளித்தார். இதை நம்பிய நீதிபதியும் நபர் தெரிவித்த வங்கிக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்தார்.

2 வாரங்களுக்கு பிறகுதான் முன்னாள் நீதிபதிக்கு, தான் டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கி பணத்தை இழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஆன்லைன் மூலமாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்னாள் நீதிபதியிடம் பணமோசடியில் ஈடுபட்ட மர்மநபரை தேடிவருகின்றனர்.

1 More update

Next Story