இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
ஜம்மு மற்றும் பஞ்சாபில் பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது.
Live Updates
- 10 May 2025 8:12 PM IST
இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்த நிலையில், முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தலைமை தளபதி, முப்படை தளபதிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
- 10 May 2025 7:41 PM IST
இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்ததற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது. நமது எல்லையை காக்கும் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு வணக்கம்; அமைதி நிலைத்திருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
- 10 May 2025 7:38 PM IST
இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளின் தரப்பிலும் சண்டையை உடனடியாக நிறுவத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி மத்திய அமைச்சகம் சார்பில் முப்படை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தனர். அப்போது கர்னல் சோபியா குரேஷி கூறும்போது, இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை, எஸ்.-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்து விட்டோம் என பாகிஸ்தான் கூறியது பொய் என கூறியுள்ளார்.
இந்திய விமானப்படை, மசூதிகளை தாக்கியது என பாகிஸ்தான் பொய் தகவல்களை பரப்பியது. வழிபாட்டு தலங்களை இந்தியா தாக்கவில்லை. எனினும், பாகிஸ்தான் தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது என்றார்.
- 10 May 2025 7:03 PM IST
தேச பாதுகாப்பிற்காக முப்படைகள் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும். இந்தியாவின் இறையாண்மையை பாதுகாத்து கொள்வதில் எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என ராணுவ அதிகாரி ரகு நாயர் கூறியுள்ளார்.
- 10 May 2025 6:48 PM IST
முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். இதில், இந்தியாவின் எஸ்.-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்து விட்டோம் என பாகிஸ்தான் கூறியது பொய் என்று கர்னல் சோபியா குரேஷி கூறியுள்ளார்.
- 10 May 2025 5:44 PM IST
இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு
இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டன. நேற்றிரவு முழுவதும் மத்தியஸ்தம் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. இதில், முழு அளவில் மற்றும் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இரு நாடுகளும் ஒப்பு கொண்டு விட்டன என டிரம்ப் அறிவித்து உள்ளார்.
- 10 May 2025 5:16 PM IST
காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய எறிகுண்டு தாக்குதலில் வீடுகள் பலத்த சேதமடைந்தன.
- 10 May 2025 5:04 PM IST
இந்திய ராணுவ தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டன என பாகிஸ்தான் கூறி வருவதில் உண்மையில்லை. அவை பொய்யானவை மற்றும் தெளிவாக ஜோடிக்கப்பட்டவை என்று மிஸ்ரி உறுதியாக கூறியுள்ளார்.
- 10 May 2025 4:00 PM IST
வருங்காலத்தில் எந்தவித பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராக கவனத்தில் கொள்ளப்பட்டு, அதற்கேற்ப பதிலடி கொடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
- 10 May 2025 3:22 PM IST
ஆப்கானிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது என்ற பாகிஸ்தான் கூறியிருந்தது. அந்த ஏவுகணை, தங்களுடைய நாட்டின் வழியே கடந்து சென்றது என்றும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் கூற்றை ஆப்கானிஸ்தான் அரசு இன்று மறுத்துள்ளது.
இந்தியா, தங்களுடைய நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என அதுபற்றி தலீபான் அரசு விளக்கம் அளித்துள்ளது.