மத்திய அரசின் திட்டம் 100 சதவீதம் செயல்படுத்தப்படுகிறது


மத்திய அரசின் திட்டம் 100 சதவீதம் செயல்படுத்தப்படுகிறது
x

புதுவையில் மத்திய அரசு திட்டம் 100 சதவீதம் செயல்படுத்தப்படுகிறது என்று மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா கூறினார்.

புதுச்சேரி

புதுவையில் மத்திய அரசு திட்டம் 100 சதவீதம் செயல்படுத்தப்படுகிறது என்று மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா கூறினார்.

சாகர் பரிக்ரமா பயணம்

புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சாகர் பரிக்ரமா 9-வது பயணத்திட்டம், மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா நடந்தது.

விழாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். விழாவில் மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி புருஷோத்தம் ரூபலா, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மீனவர்களுக்கான உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு கடன் அட்டைகளையும் வழங்கினர். இதைத்தொடர்ந்து மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது.

100 சதவீதம்

விழாவில் மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா பேசியதாவது:-

அரவிந்தர் வாழ்ந்த பூமிக்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் பிரதமர் மோடி மீன்வளத்திற்கு தனியாக அமைச்சகத்தை உருவாக்கி அதிக நிதியையும் ஒதுக்கி, திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதையும் கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் மீனவர்கள் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு வந்து உங்களை (மீனவர்களை) பார்த்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. யூனியன் பிரதேசங்களின் மத்திய அரசின் திட்டங்களை 100 சதவீதம் செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதற்காக யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு முனைப்புடன் பணியாற்றி வருகிறது. அதன்படி யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்களை அரசுடன் இணைந்து 100 சதவீதம் செயல்படுத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.200 கோடி ஒதுக்கீடு

மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசுகையில் 'மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும், புதுவையில் ஆளும் பா.ஜ.க கூட்டணி அரசும் மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வேகமாக செயல்படுத்தி வருகிறது. புதுச்சேரிக்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.200 கோடி நிதி மீன்வளத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் மீன்வளத்துறை தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது' என்றார்.

விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய். சரவணன் குமார், புதுவை மாநில பா.ஜ.க. தலைவர் செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், செந்தில்குமார் மற்றும் மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குனர் தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுற்றுலா மேம்படுத்த கவனம்

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது :-

புதுச்சேரி மாநிலம் கடற்கரை சார்ந்த பகுதியில் அமைந்து உள்ளது. மீனவர்கள் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

புதுவை அரசு கடந்த பட்ஜெட்டில் ரூ.106 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இங்கு சுற்றுலாவை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தி வருகிறோம். தேங்காய்திட்டு துறைமுகத்தை தூர்வார ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக இந்தநிலை தொடர்ந்து வருகிறது. ஆண்டு முழுவதும் எந்தவித தடையும் இன்றி விசைப்படகுகள் கடலுக்குள் சென்று வர தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.

துறைமுகம் விரிவாக்கம்

தேங்காய்திட்டு துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கடல் அரிப்பை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பாண்டி மெரினாவில் இருந்து வீராம்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வருகிறார்கள். இனிவருங்காலங்களில் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிக்காமால் இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் குறைகளை அரசு கேட்டறிந்து நிவர்த்தி செய்யும். மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுபற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்கான டீசல் மானியம் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.



Next Story